Tuesday 17 June 2014

"பாதுகாக்கப்பட்ட ஏடு" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "பாதுகாக்கப்பட்ட ஏடு" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது எந்த நேரத்தில் விழும் என்ற விபரம் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஏடு லவ்ஹூல் மஹ்ஃபூல் என்று சொல்லப்படுகிறது.
"பதிவுப் புத்தகம்' "பாதுகாக்கப்பட்ட ஏடு' "மறைக்கப்பட்ட ஏடு' "தெளிவான ஏடு' என்ற வார்த்தைகளாலும் இந்தப் பதிவுப்புத்தகம் குறிப்பிடப்படுகிறது.
ஒருமனிதன் நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடிதான் நடக்கிறது. ஒருவன் பிறப்பதும் மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும் ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன.
6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 36:12, 43:4, 50:4, 54:43, 56:78, 57:22, 85:22 ஆகிய வசனங்கள் இது குறித்து பேசும் வசனங்களாகும்.
திருக்குர்ஆன் கூட அவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 85:21-22, 56:77-78)
எல்லாமே பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன என்றால் மனிதனுக்கு சுதந்திரம் கிடையாதா? ஒருவன் கெட்டவனாக இருப்பதும் விதிப்பலகையில் எழுதியபடிதான் நடக்கின்றன என்றால் அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்று இதில் கேள்விகள் எழுகின்றன.
இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ள 289வது குறிப்பை வாசிக்கவும்.

158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?

இந்த வசனங்களில் (6:47, 46:35) அல்லாஹ்வின் தண்டனை வரும் போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று கூறப்படுகிறது.
அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும்போது கெட்டவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்படுவார்கள். நல்லவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
ஆனால் புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற துன்பங்கள் நேரும் போது, அந்தத் துன்பங்களில் தீயவர்கள் மாத்திரமின்றி நல்லவர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். அப்படியானால் இந்த வசனங்கள் நடைமுறை நிகழ்வுகளுக்கு எதிராக இருக்கிறதே என்று சிலருக்குத் தோன்றலாம்.
இந்த இரு வசனங்களும் பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்கள், சோதனைகள் பற்றி பேசவில்லை. மாறாக இறைத்தூதர்கள் அனுப்பப்படும் பொழுது அந்த இறைத்தூதர்களை எதிர்த்த சமுதாயத்திற்கு வேதனை வருமானால் நல்லவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து விட்டு தீயவர்களை மாத்திரம் தான் அல்லாஹ் அழித்திருக்கிறான். அதைத்தான் இவ்வசனங்கள் சொல்கின்றன.
திருக்குர்ஆன் 46:35 வசனத்தில் இதைத் தெளிவாகவே அல்லாஹ் சொல்கின்றான்.
"தூதர்களில் உறுதிமிக்கவர்கள் பொறுமையை மேற்கொண்டது போல் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அவசரப்படாதீர்!' என்று சொல்லி விட்டு "அழிவு வரும் போது பாவிகள் மாத்திரமே அழிக்கப்படுவார்கள்' என்று கூறுகிறான்.
இப்படித்தான் நூஹு நபி, லூத் நபி, ஹூத் நபி, ஸாலிஹ் நபி, மூஸா நபி போன்ற நபிமார்களின் சமுதாயத்தவரில் தீயவர்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு நல்லவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனர்.
நபிமார்கள் இல்லாத போது வரும் சோதனைகள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல்தான் வந்தடையும். அதற்கும், இந்த வசனத்திற்கும் சம்மந்தம் இல்லை.