Thursday 25 April 2013

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

ஒரு பெண்ணை நேரடியாகப் பார்ப்பதற்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் உரிய சட்டமாகும்.



எப்போது எந்நிலையில் பெண்களை நேரடியாகப் பார்ப்பது அனுமதிக்கப்படுமோ அந்நிலையில் தொலைக்காட்சியில் பார்ப்பதும் அனுமதிக்கப்படும். எந்நிலையில் நேரடியாகப் பார்ப்பது தடுக்கப்படுமோ அந்த நிலையில் பெண்களை தொலைக்காட்சியில்
பார்ப்பதும் தடை செய்யப்பட்டதாகும்.


எவ்வித்த் தேவையுமில்லாமல் தவறான நோக்கத்தில் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களான ஆண்கள் அவ்வாறு பார்ப்பதை விட்டும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவனும் இறைத்தூரும் கட்டளையிடுகிறார்கள்.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(அல் குர்ஆன் 24 30 31)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது, அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (6243)

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : திர்மிதி 2700(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (1513)

மேறகண்ட செய்திகள் யாவும் தேவையின்றி தவறான நோக்கத்தில் பெண்களைப் பார்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

அதே வேளை பெண்கள் ஹிஜாபைக் கடைபிடித்திருக்கும் நிலையில் அவா்களைப் பார்ப்பதற்கு தேவை ஏற்பட்டால் அப்போது அந்நிய ஆண்கள் பெண்களைப் பார்க்கலாம். இதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்கு நபிமொழிகளில் ஏரளாமான ஆதாரங்கள் உள்ளன.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

புகாரி 98

நபியவா்களின் முன்னிலையில் பெண்கள் பகுதிக்குச் சென்று பெண்கள் தர்மமாக தருபவைகளை பிலால் (ரலி) தமது ஆடையில் வாங்கிக் கொண்டார் என்பதும் தேவை ஏற்படும் நேரத்தில் பெண்களைப் பார்ப்பது அனுமதி என்று இச்செய்தி விளக்குகின்றது.

இஸ்லாம் சொல்லக் கூடிய ஹிஜாபை முஸ்லிமல்லாத பெண்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களை நேரில் சந்திக்கும் நிலை நமக்கு ஏற்படுகிறது. உதாரணமாக பெண் மருத்துவர், பெண் அதிகாரி, பெண் நிர்வாகி, பெண் ஆசிரியை எனப்பலரையும் நாம் சந்திக்கும் அவசியம் ஏற்படுகிறது. அவர்கள் இஸ்லாமிய மரபுப்படி ஆடை அணியாவிட்டாலும் அவர்களை நமக்கு நாமே ஹிஜாப் அணிந்து கொண்டு பார்க்கலாம். அதாவது முகத்தை மட்டும் காமப்பார்வை இல்லாமல் பார்க்கலாம். அது போல் தொலைக் காட்சியிலும் பார்க்கலாம்.

ஆடல் பாடல் கூத்து போன்றவைகளில் ஈடுபட்டுள்ள பெண்களை நேரில் பார்ப்பது கூடாது. அதுபோல் தொலைக்காட்சியிலும் பார்க்க கூடாது.

இது பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் நூலில் உருவப்படம் தொடர்பான பதிலை பார்க்கவும்

http://onlinepj.com/books/naveena-prechanaigalum/

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/tholaikatchiyil_pengalai_parkalamaa/

கிரகணத்தொழுகை 25042013


சந்திர கிரகணம்
=============

இன்று இரவு 1,20 லிருந்து 1:55 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுகிறது
1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :16

அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 1,20 லிருந்து 1:55 மணி வரை திருப்பூர் மாவட்ட மர்க்கஸ்
மஸ்ஜிதுரஹ்மான் பள்ளிவாசலில் நபி வழி கிரகணத்தொழுகை  நடை பெறுகிறது

இதைப்போன்று பல்லடம், மங்கலம். M.S நகர், உடுமலை, தாராபுரம்,மடத்துக்குளம்,ஆண்டிய கவுண்டனூர்  ஆகிய கிளை மர்கஸ்களில் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 1,20 லிருந்து 1:55 மணி வரை கிரகணத்தொழுகை நடை பெறுகிறது
அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெர
அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பூர் மாவட்டம்

தொழுகை முறை .....

தொழுகை முறை .....
***********************************

** சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.


** கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

** பள்ளியில் தொழ வேண்டும்

** இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

** இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

** ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்

** நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்

** கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும்.

** மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

'நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1515

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1502

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1499

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும், பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1518

அனைவரும் தொழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவோம்!

    பிறமத சகோதரர்.சுந்தர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _V.K.P.கிளை



         

    தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்V.K.P.கிளை  சார்பில் 24.04.2013அன்று  பிறமத சகோதரர்.சுந்தர் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
     அல்ஹம்துலில்லாஹ்.