Wednesday 19 October 2011

மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


உள்ளே செல்லும் முன்:


(இணையத்தில் உலாவரும் மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு தேவையானவற்றையும், விருப்பமானவற்றையும் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவார்கள். (பதிவர்களாகவோ த‌னக்கென ஒரு தளத்தை உடையவர்களாகவோ இல்லாத பட்சத்தில்) அவர்கள் அத்தனை பேருக்கும்'வலைப்பதிவு', 'பதிவர்கள்', 'சமூக தளங்கள்', 'திரட்டி', 'ஓட்டுப்பட்டை'போன்ற விஷயங்கள்பற்றி தெரிந்திருக்குமா என்றால், சிலரைத் தவிர அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நானும் இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன் எனக்கும் இவை எதுவுமே அறிமுகம் இல்லாமல்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் (இதைப் பற்றி அறியாத, சாதாரணமாக படித்துச் செல்லும் வாசகர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு குழப்பமாக இந்த இடுகை அமைந்துவிடக் கூடாது என்பதால்) கீழ்க்காணும் இந்த சிறு விளக்கம் தேவைப்படுகிறது.

பல்வகை இணைய தளங்களில் ஒன்றான 'ப்ளாக்கர்'(Blogger/Blogspot/Blog)என்பது கூகுள் த‌ரும் ஒரு இலவச தளமாகும். இதனை தமிழில் 'வலைதளம்', 'வலைப்பதிவு', 'வலைப்பூ' என்கிறோம். ஏராளமான இலவச வலைப்பூ சேவைகள் இருந்தாலும் இந்த ப்ளாக்கர் சேவையின் மூலமே பெரும்பாலானவர்கள் வலைப் பதிவுகள் உருவாக்கி, அவரவர் கருத்துக்களையும் பலவித செய்திகளையும், கலைகளையும் மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட வலைப் பதிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஒன்று திரட்டித் தரும் இணையத் தளத்திற்குதான்'வலைத் திரட்டி' (சுருக்கமாக 'திரட்டி') என்பார்கள். தமிழ் மொழி வலைப்பதிவுகளுக்கும் பல திரட்டிகள் உள்ளன. குறிப்பாக 'இண்ட்லி', 'உலவு', 'தமிழிஷ்', 'திரட்டி', 'தமிழ் 10', 'தமிழ்ப் பூங்கா', 'தமிழ்வெளி'போன்றவற்றை சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் 'தமிழ் மணம்' என்ற திரட்டியுமாகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.)

சில நாட்களுக்கு முன் இந்த தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பதிவுலகின் சக சகோதரர்களை நாகரிகமற்ற வார்த்தைகளில் உரையாடி இழிவுபடுத்தியமைக்கு முதலில் என் கண்டனங்களை பதிவுச்செய்துக் கொள்கிறேன். 



அதைத் தொடர்ந்து அவர் இட்ட‌ ஒரு பின்னூட்டத்தில், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும் எழுத்துப் பரிமாற்றங்களின்போதும் கூறிக்கொள்ளும் 'முகமன்' வார்த்தைகளையும் இழிவுபடுத்திக் கூறியுள்ளதற்காக தமிழ்மணத்திடம் முஸ்லிம்கள் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்மண நிர்வாகிகள் சரியான முறையில்விளக்கம் அளிக்காத வரை தமிழ்மணத்தின் மீதான எதிர்ப்பு தொடரும்என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்.

இதோ தமிழ்மணத்தின் அந்த நிர்வாகி கக்கிய விஷம்:

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

தமிழ்மண நிர்வாகிகளே! எங்கள் மார்க்கம் கற்றுத்தந்த, எக்காலத்துக்கும்/ நேரத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு முகமன் வார்த்தையை உங்களில் ஒருவர் கொச்சைப்படுத்துகிறார் என்றால், "இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது"என்பதுபோல் நீங்கள் கண்டும் காணாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது ஒரு நிர்வாகத்தின் பொறுப்பான நிர்வாகிகளாக அவர் சார்பில் இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?


தமிழ்மணத்துக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கு "ஜாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளைப் புறந்தள்ளி இப்பதிவர் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறார்" என 'கிரீன் பேஜ்' (green badge) கொடுக்கிறீர்களே... அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அவரவர் மதங்களைப் பின்பற்றிச் செல்பவர்கள் உங்கள் பாஷையில் 'வெறியர்கள்' என்றால், அநாவசியமாக வலிய வந்து ஒரு மார்க்கத்தின் முகமனை கொச்சைப்படுத்துபவர்கள் 'மகா மட்டமான வெறியர்கள்' அல்லவா? அப்படிப்பட்டவர்களைப் புறந்தள்ளி 'ரெட் பேஜ்' கொடுத்து உங்கள் நிர்வாகத்தைவிட்டும் வெளியேற்றத் தயாரா? (எரிகிறதைப் பிடுங்கினால்தானே கொதிக்கிறது அடங்கும்..?)

தமிழ்மண நிர்வாகிகளே! இஸ்லாமிய முகமனை கேலி செய்துவிட்டதால் அதில் மாசு ஏற்படுத்தி விட்டதாக எண்ணிவிடவேண்டாம். ஒருபோதும் அதன் தூய்மை மாறாது. ஆனால் காற்றுக்கு எதிரே துப்பினால் அது முகத்தில்தான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது தமிழுக்காக செய்யும் சேவை என்று நீங்கள் சொல்வதால், உங்கள் மூலம்தான் எங்கள் பதிவுகள் தூக்கி நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை. உங்களைப்போல் எத்தனையோ திரட்டிகள் உள்ளன என்பது உங்களுக்கும் தெரியும். பதிவர்களின் ஆதரவும் உங்கள் வளர்ச்சியின் ஒரு பங்கு என்பதும் உங்களுக்கு தெரியும்.ஆகவே....

இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும், எங்கள் சகோதர பதிவர்கள் பலரை கேவலப்படுத்தி இருப்பதற்கும் தமிழ்மணமாகிய நீங்களும், சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகியும் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்கள் 'ஓட்டுப்பட்டை' தொடர்ந்து எங்கள் பதிவில் நீடிக்கும்; எங்கள் பதிவுகள் உங்கள் திரட்டியில் இணைக்கப்படும். அத்துடன் புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லவும் தயங்கமாட்டோம்..!
posted by SM.YOUSUF