Sunday 1 June 2014

"முன்னர் அருளப்பட்டது" உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 01.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "முன்னர் அருளப்பட்டது" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முன்னர் அருளப்பட்டவை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.
நபிகள் நாயகத்துக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது என எண்ணக் கூடாது. ஒவ்வொரு தூதருக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.
வேதங்களைக் குறித்து முஸ்லிம்களிடம் சில தவறான நம்பிக்கைகள் உள்ளன.
"தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன'' என்பதும் அந்தத் தவறான நம்பிக்கையில் ஒன்றாகும்.
தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் இந்தத் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:213, 14:4, 19:12, 57:25, 87:18,19)
முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அவற்றை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. "முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது; அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லை'' என எண்ணாமல் "எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன'' என்று நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் "அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன'' எனப் பல இடங்களில் கூறுகிறது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41)
திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்ப வேண்டும்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94)