Tuesday 27 May 2014

"குழந்தை வளர்ப்பு" _ அவினாசி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 25.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோ.சிராஜ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

"தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 27.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் " எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

ஹஜ் கடமையின் போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் "அரஃபாத்'' எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் "முஸ்தலிஃபா'' எனும் இடத்தில் தங்குவார்கள். "முஸ்தஃலிபா'' என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், "அரஃபாத்'' என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு வெளியேயும் அமைந்துள்ளது.
உயர்ந்த குலத்தவரான தாங்கள் மட்டும் புனித எல்லையில் தங்கி விட்டு மற்றவர்களை அங்கே தங்குவதைத் தடுத்து வந்தனர். "அரஃபாத்'' என்பது ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக அவர்களால் கருதப்பட்டது.
இஸ்லாம் இந்தத் தீண்டாமையை ஒழித்துக் கட்டியது. உயர்ந்த குலத்தைச் சேர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களையும் மற்ற மக்களுடன் போய் "அரஃபா'' திடலில் தங்குமாறு இவ்வசனத்தின் (2:199) மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் உலக மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி சாதி, குலம், மொழி, இனம் காரணமாகக் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இஸ்லாம் குழி தோண்டிப் புதைத்தது.
இது பற்றி புகாரி (4520) முஸ்லிம் ஆகிய நூல்களில் ஹதீஸ்கள் உள்ளன.

"இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 27.05.2014 அன்று சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் "இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இவ்வசனங்களில் 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4 இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இச்சட்டங்கள் அமைந்துள்ளன.
இதை வாசிக்கும் சிலர் "இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை'' என்று விமர்சிக்கின்றனர்.
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களே மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.
கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைக்கப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப் போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன்பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?
திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.
சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.
நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால்வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக(?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச்சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.
குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
இந்தப் பெயரளவிலான தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.
53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!
இவ்வாறு அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.
சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் "நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்கு ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே'' என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
மேலும் குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.
சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.
ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.
மனிதாபிமானச்(?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.
பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் "ஆறு மாதம் சோறு போடலாம்'' எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் "பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்'' என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?
கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்று பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.
ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கிட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.
அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? "கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது'' என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.
இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.
திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.
மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.
கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
"இவர்கள் இங்கே இருக்கிறார்களா?'' என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.
தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் அரசுக்கு மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.
"பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!'' என்று குற்றவாளிகளுக்காக பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்புபவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத்தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.
இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.
உதாரணத்துக்காகத்தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.
கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.
உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத்தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்று சிலர் கேட்கின்றனர்.
இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றபின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
மேலும் "எடுத்தேன்; கவிழ்த்தேன்'' என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.
மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)
இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)

"நபிகள் நாயகத்தின் 4 பணிகள் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நபிகள் நாயகத்தின் 4 பணிகள்   "  36 எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

36. நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள்

இவ்வசனங்களில் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான்.
* குர்ஆனை ஓதிக் காட்டுவது
* மக்களைத் தூய்மைப்படுத்துவது
* மக்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பது
* மக்கள் அறியாதவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது
ஆகியவை அந்த நான்கு பணிகள்.
இந்த நான்கு சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.
குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்ற வாதத்தைத் தற்போது சிலர் முன் வைக்கின்றனர்.
வேதத்தை இறைவனிடம் பெற்று மக்களிடம் கொடுப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் இந்த நான்கு சொற்றொடர்களை இறைவன் கூறியிருக்க மாட்டான். "வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்'' என்பதோடு நிறுத்திக் கொள்வான்.
வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியவுடன் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மக்கள் அதை விளங்கிக் கொள்வார்கள்.
ஆனால் வேதத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது "வசனங்களை ஓதிக் காட்டுவார்; வேதத்தைக் கற்றுக் கொடுப்பார்'' என்று வேதம் தொடர்பான இரண்டு பணிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறான்.
ஓதிக் காட்டுதல் என்றால் வசனங்களை வாசித்துக் காட்டுதல் என்று புரிந்து கொள்கிறோம்.
வேதத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?
வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!
(திருக்குர்ஆன் 29:48)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியும் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்ததாக ஆகுமே தவிர குர்ஆனைக் கற்றுக் கொடுத்ததாக ஆகாது.
ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குத் தூதர்கள் அவசியம் இல்லை. அந்த மொழியை அறிந்த யார் வேண்டுமானலும் அதைச் செய்ய முடியும். எனவே "தேவைப்படும் வசனங்களுக்குச் சொல்லாலும் செயலாலும் இவர் விளக்கம் தருவார்'' என்பதுதான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார் என்பதன் பொருள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டார்கள் என்றால் அவ்விளக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பது தான் பொருள்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய திருக்குர்ஆன் எவ்வாறு வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளதோ அவ்வாறே அவர்களின் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களும் வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளன என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.
குர்ஆனை முறையாகவும், முழுமையாகவும் விளங்கிட நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் அமைந்துள்ளன.
வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்பதுடன் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் அறியாதவற்றை அவர் கற்றுக் கொடுப்பார் என்றும் கூறுகிறான்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்களைத் தூய்மைப்படுத்துவார் என்றும் கூறுகிறான்.
குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை இல்லை என்றால் அதற்கு மாற்றமான பொருள் தரும் வகையில் இவ்வளவு சொற்களை இறைவன் பயன்படுத்தி நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்று கூறுவானா?
எனவே குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோர் உண்மையில் குர்ஆனைத்தான் மறுக்கிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 62:2)
வேதம் மட்டுமின்றி வேதமல்லாத இறைச் செய்தியும் இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதை விரிவாக அறிய 18, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

"கல்வியின் அவசியம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 26.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. தவ்பீக் அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்