Tuesday 29 October 2013

பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு .....


தீபாவளி கொண்டாடுகின்றோம் என்று சொல்லி முஸ்லிம்கள் பட்டாசு வெடிப்பதை காண்கின்றோம்; தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசுகளை வாங்கிக்கொடுத்தும் வெடிக்கச் செய்கின்றனர். 
பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் ஹராம்களைச் செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள். பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில் ஹராமாகும். காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும் ஹராமாகும். நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது. இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இதை முஸ்லிம்கள் உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.





பட்டாசுகள் வெடிப்பொருட்களில் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று எதுவும் இல்லை. அனைத்து பட்டாசுகளும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது. சிறிய பட்டாசைக் கொளுத்தினாலும் அதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குடிசைகளில்




பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.


ஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி 11


அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம், "எந்த நற்செயல் சிறந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள். நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், "என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், "இதுவும் என்னால் இயலவில்லையென்றால்....?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள். நூல் : புகாரி 2518

எனவே பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது. இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும். எனவே முஸ்லிம்கள் இந்த பாவத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.